முற்போக்கு எனும் பிற்போக்கு
முற்போக்கு எனும் பிற்போக்கு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கும் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இது RSS யின் திட்டம் என்றும் விமர்சனம் எழுந்து வரும் சூழலில் சமீப கால நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு பார்ப்பது மிகவும் அவசியம்.
கட்டாய கல்வி திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டதால் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடும் என்றும் மேலும் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று காங்கிரசு அரசு கூறியது. ஆனால் தற்போது இரண்டும் குறையவில்லை அதற்கு முக்கிய காரணம் தரமான கல்வியை இத்திட்டம் உறுதிப்படுத்தவில்லை.
இத்திட்டத்தை முடமாக்கியதில் ஆசிரியர் பங்கு அளப்பரியது. ஒரு வகுப்பை கற்றல் சார்ந்து வழிநடத்தாமல் இருப்பதில் நம் அரசு ஆசிரியர்களுக்கு நிகர் யாருமில்லை. அதேபோன்று திறமையான ஆசிரியர்களை பயன்படுத்துவதில் அரசுக்கு இருக்கும் தயக்கமே எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும்.
மாணவர்களிடம் கற்றல் குறைபாடு இருக்கு என்று உணர்ந்தால் முதலில் கல்வி துறையின் மீதுதான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக இத்திட்டம் ஆசிரியர்களை மேலும் தங்களின் தவறை கூட்டவே வழிவகுக்கும். ஆசிரியர்களின் அலட்சியத்துக்கு ஒரு உதாரணம் மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் விடைத்தாளை சரியாக திருத்தாமல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அப்படி தவறு செய்யும் ஆசிரியர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக ஒரு உதாரணமும் நம்மிடம் இல்லை.
ஒவ்வொரு காலத்திலும் பட்டியல் சமூகம் வளர்ச்சி நிலை அடைய முற்படும்போதெல்லாம் அதற்கு திராவிட ஆட்சியாளர்கள் முற்போக்கு என்று ஒன்றை கூறி அதன் உள்ளார்ந்த தன்மையை கபளீகரம் செய்துவிட்ட வரலாறு நம்மிடம் உள்ளது.
பெடரேஷன் மற்றும் தலித் முன்னோடிகளால் உருவாக்கிய இரவு பாடசாலை போன்று சமீப காலத்தில் தலித் இளைஞர்கள் தொடர்ந்து ஆட்சி செய்த அரசுகள் நம் சமூகத்தை வஞ்சித்ததை உணர்ந்து கல்வியில் ஏதேனும் உள்ளூர் அளவில் மாற்றம் வேண்டும் என்கிற நோக்கில் இரவு பாடசாலைகளை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இது அதிகரித்தும் வருகிறது என்பது கவனிக்கதக்கது.
இரவு பாடசாலைகளை நடத்தும் பெரும்பாலான இளைஞர்கள் ஒன்று சுயமாக நடத்துகிறார்கள் அல்லது ஏதேனும் தலித் கட்சிகளின் சார்புடன் நடத்துகிறார்கள். இதனை உணர்ந்த திமுக அரசு எதிர்காலத்தில் நமக்கு ஆபத்தாக அமையும் என்று கருதி இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டம் தலித் இளைஞர்கள் நடத்தும் இரவு பாடசாலைகளை காலிசெய்வது மட்டுமல்லாமல் நம் மக்களின் சிறு விழுப்புணர்வையும் முளையிலே கிள்ளும் திட்டமாக அமைகிறது. தலித்களை ஒடுக்குவதில் RSS உடன் மட்டுமில்லை யாருடன் வேண்டுமானாலும் திமுக கைகோர்க்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். தலித்களை ஒடுக்குவதில் வட்டார அளவில் சூத்திரர்களுடனும் தேசிய அளவில் RSS உடனும் திமுக இணைகிறது.
என் பார்வையில் RSS என்பதற்கு பொருள் தலித் அல்லாதவர்கள் அனைவருமே வருவார்கள் ஏனெனில் அவர்கள் எப்போதும் கைகோர்பதற்கு தயங்கியதில்லை. இதனை உணர்ந்து கல்வி சார்ந்த ஓர் உரையாடலை தலித் இளைஞர்கள் மத்தியில் உரையாட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Comments
Post a Comment